கடந்த சில நாட்களாக தமிழ்நாடு எங்கும் அனல் பறக்கும் பிரசாரத்தில் அரசியல் கட்சியினர் இடுபட்டனர். நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று சுயேட்சை வேட்பாளர்களின் பங்களிப்பு அதிகமாக இருந்தது. இத்தேர்தல் சுயேட்சை வேட்பாளர்களின் தேர்தல் என்றே சொல்லலாம் வரலாறு காணாத அளவுக்கு இத்தேர்தலில் போட்டியிட்டனர். இவை அனைத்தும் ஒரு பக்கம் இருக்க இத்தேர்தலில் எத்தனை வாக்களிக்கவேண்டும் என்று நம்மில் சிலருக்கு இந்த சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது. எனவே தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் பற்றி அறிந்துக்கொள்ள சிறுமுயற்சி.
தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் எனப்படுபவை இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் ஊர்களை அந்த ஊரின் மக்கள் தொகை மற்றும் வருவாய்க்கு ஏற்பப் பிரிக்கப்பட்ட உள்ளாட்சிப் பிரிவுகளைக் குறிக்கும்.தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி அமைப்புகள் கீழ்காணும் நான்கு முக்கிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. அவை
1. மாநகராட்சி
2. நகராட்சி
3. பேரூராட்சி
4. ஊராட்சி
மாநகராட்சி மன்றம்
தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 10 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாநகராட்சி மன்றத் தலைவர்களை (மேயர்) 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்தனர்.
2006 ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் தேர்வு செய்யப்பட்ட மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்பட்டனர். 2011 ஆம் ஆண்டு நடைபெறுகின்ற தேர்தலில், 1996, 2001 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களைப் போல் மக்கள் நேரடியாகத் தேர்வு செய்ய உள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் (துணை மேயர்) தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது
- தமிழ்நாட்டில் 10 மாநகராட்சி மன்றங்கள் இருக்கின்றன.